கொலம்பியாவில் குண்டுத் தாக்குதல் மூன்று படையினர் உயிரிழப்பு
கொலம்பியாவின் கேந்திர நிலையமான பசுபிக் துறைமுகப் பகுதியில் கெரில்லாக்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 2 கடற்படையினரும் தரைப்படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதாக இதேவேளை, அந்நாட்டின் பலபாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.பத்து கிலோ நிறையுடைய இக்குண்டு றிமோட் கொன்றோலர் மூலம் இயக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினரின் உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இவர் மேலும் தெரிவிக்கும்போது, கொலம்பியாவில் தேர்தல் நடைபெறவுள்ள இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதுடன் இத் தாக்குதல்கள் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடுபவர்களை இலக்குவைத்தே நடாத்தப்படுகின்றன. இவ்வன்முறைச் சம்பவங்களுக்கும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் கொலம்பியாவின் புரட்சிகர இயக்கமே (எவ்.ஏ.ஆர்.சி.) காரணமாகுமெனவும் தெரிவித்தார். இதுவரை இங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களினால் 21க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நான்கு இலட்சத்திற்கும் அதிகமான படையினரும் பொலிஸாரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தும் இத் தாக்குதல் சம்பவங்கள் நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.