காட்டுத் தீயினால் சூழலுக்கு அதிகளவில் கேடு அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை
கலிபோர்னியாவில் பரவிய பாரிய காட்டுத் தீயினால் வளிமண்டலம் அதிகளவில் மாசுபட்டிருப்பதன் காரணமாக அப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகளவில் மாசுபடுத்தப்பட்டுள்ள வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு இங்குள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இக் காட்டுத் தீயினால் 6,40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதேவேளை, கலிபோர்னியாவின் வரலாற்றிலேயே பாரிய இடப்பெயர்வு இதுவெனக் கருதப்படுவதுடன் 14 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளிமண்டலம் அதிகளவில் மாசடைந்திருப்பதால் முதியவர்களும் சிறுவர்களும் குறிப்பாக இருதயம் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்படுவார்களென கலிபோர்னியாவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. கலிபோர்னியாவின் தென்பகுதி முழுவதும் அடர்த்தி கூடிய புகைமண்டலம் பரந்திருப்பதை செய்மதியூடான புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவருட காலத்தில் சுமார் 4,40,000 கார்களினால் வெளியேற்றப்படும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்திற்கு சமனான அளவில் இக்காட்டுத் தீ சூழலை மாசுபடுத்தியிருப்பதாக சூழலியல் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, தீ பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதும் மூன்று கிராமங்களில் பரவியுள்ள பாரிய தீச் சுவாலைகளினால் மேலும் 23,000 வீடுகள் அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குளிர்ச்சியான காலநிலை தீயை அணைக்கும் முயற்சிகளுக்கும் உதவுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இத்தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னும் பல நாட்கள் எடுக்குமென தீயணைப்புப் படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.