திண்டுக்கல் அருகே பூச்சூடி பொட்டு வைத்த விதவை பெண்கள்!!
உலக விதவையர் தினத்தையொட்டி திண்டுக்கல் அருகே விதவைப் பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்துக் கொண்டனர்.
பெண்கள் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு இணையாக முன்னேறி வந்த போதிலும் சமூகத்தின் பல கட்டுப்பாடுகளில் சிக்கியுள்ளனர். நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில் பெண்களின் நிலை மோசமாக உள்ளது. இதனை போக்க பல்வேறு சமூக நல அமைப்புகள் தொடர்ந்து களப்பணிகள் ஆற்றி வருகின்றன.
இந்நிலையில் உலக விதவையர் தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் கணவனை இழந்த பெண்கள் பூச்சூடி, பொட்டு வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தீபம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த புரட்சிகர நிகழ்ச்சியில் விதவைகள் கலந்து கொண்டனர். முதலில் தயங்கிய அவர்கள் பின்னர் 2 பேர், 3 பேராக வந்து பூவையும், பொட்டையும் வைத்துக் கொண்டனர்.
இது குறித்து மதுரை ஐடியாஸ் மைய இயக்குனர் பால் மைக் பேசுகையில், ‘கிராமப்புற விதவைகள், மக்கள் முன்னிலையில் பூவும் பொட்டும் வைத்திருப்பது புரட்சிகரமானதாகும்.
தமிழகத்தில் 20 லட்சம் விதவைகள் உள்ளனர். 8 பெண்களில் ஒருவர் விதவையாக உள்ள பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
நகர்புறங்களில் உள்ள விதவைகளில் பெரும்பாலானவர்கள் பூவும், பொட்டும் வைத்துக் கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் அது போன்ற நிலை இல்லை.
இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த புரட்சி நல்ல தொடக்கமாகும் என்றார்.
Average Rating