சீனாவுடன் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம்: தவறை திருத்தியது கூகிள்
சீனாவுடன், இந்தியாவின் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம் வெளியிட்ட, கூகிள் வெப் சைட் நிறுவனம், அதற்கு வருத்தம் தெரிவித்து, திருத்திக் கொள்ள முன்வந்துள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலம் அருணாச்சல் பிரதேசம்; சீனாவை ஒட்டி அமைந்துள் ளது. “அருணாச்சல் பிரதேசம் எங்களுடையது தான்’ என்று சீனா தொடர்ந்து கூறி வருவதுடன், தன் ஹெலிகாப்டர் தளத்தையும் அருணாச்சலில் அமைத்துள்ளது. ஆனாலும், இந்தியா தொடர்ந்து தன் உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை. சமீபத்தில், கூகிள் நிறுவனம் தன் வெப்சைட்டில் வெளி யிட்ட வரைபடத்தில், சீனாவுடன் அருணாச்சல் பிரதேசம் இருப்பதாக சித்தரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவில் இருந்து பலரும் கூகிள் வெப்சைட்டில் கருத்து வெளியிட்டிருந்தனர். கோல்கட்டாவில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, இந்த பிரச்னையை எழுப்பியிருந்தது.வரைபடத்தில், இந்தியா, சீனா, பூடான் ஆகிய எல்லைகளில், மஞ்சள் கோடு போட்டுவிட்டு, அருணாச்சல் பிரதேசத்தை ஒட்டிய சீன எல்லைப் பகுதியில், சிவப்பு கோடு போட்டுள்ளது கூகிள். அதாவது, சீனாவின் ஒரு பகுதி தான் அருணாச்சல் என்பதே அது.இந்த தவறை உணர்ந்த கூகிள் எர்த் நிறுவனம், தன் வெப்சைட்டில், தவறை திருத்திக்கொள்வதாக உறுதி கூறியுள்ளது. இதுகுறித்து அதன் அதிகாரி கூறுகையில், “இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தவறு உடனடியாக நீக்கப்படும்’ என்றார்.இதற்கு முன் கூகிள் எர்த் வெப்சைட்டில், சீனாவுக்கும் அருணாச்சலுக்கும் இடையே சிவப்பு எல்லைக்கோடு இருந்த தில்லை. சமீபத்தில் தான் இப்படி மாற்றப்பட்டுள்ளது.இந்தியாவின் எதிர்ப்பை அறிந்து, தவறை திருத்திக் கொள்வதாக கூகிள் கூறினாலும், சீன தரப்பில் மீண்டும் குரல் எழுப்பப்பட்டுள்ளது. “அருணாச்சல் எங்கள் பகுதி தான். அதை கூகிள் போட்டது சரி தான். அதை திருத்தினால் மீண்டும் குரல் எழுப்புவோம்’ என்று சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.