பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்: மேற்கு வங்காளத்தில் துவக்கம்!!
பாலியல் தொழிலில் இருந்து வெளியே வர நினைக்கும் பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு இந்த மாதம் துவக்க இருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஏராளமான பெண்கள் மீட்கப்பட்டு அரசு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த பெண்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், சுதந்திர ஒளி என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்க உள்ளது.
அரசு காப்பகத்தில் இம்மாத இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இத்திட்டத்தை திறந்து வைக்க உள்ளார். கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 50 பெண்களுக்கு முதற்கட்டமாக தொழிற்கல்வி அளிக்கப்படும். இவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மாதத்துக்கு 2500 ரூபாய் உதவித்தொகையாகவும் அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி காலத்துக்கு பிறகு சிறுதொழில் துவங்க முதலீடாக ரூ.25,000 ஒவ்வொரு பெண்ணுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக முதல் ஆண்டில் 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 66 லட்சமாக இருக்கும் என மகளிர் நலத்துறை அமைச்சர் சஷி பஞ்சா தெரிவித்தார்.
இது தவிர வறுமையில் வாடும் வயதான, ஓய்வுபெற்ற சுமார் 100 பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் விதமாக அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து போன்றவை வழங்கப்பட்டு அவர்களைப் பேணவும் வகைசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தர்பார் குழு நடத்திய ஆய்வில், சுமார் 4000 ஓய்வுபெற்ற பாலியல் தொழிலாளிகள் வீட்டு வேலை, குழந்தை பேணும் வேலை, சமையல் என வேலை செய்துவருகின்றனர். சிலர், வயதாகி பாலியல் தொழில் செய்யும் இடங்களிலேயே இறந்தும் போகின்றனர்.
பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் தங்கி பயிலும் விதமாக இலவசமாக கல்வி, உணவு வழங்கி அவர்களும் சமூக மையநீரோட்டத்தில் இணைய ஏதுவாக வருங்காலத்தில் அவர்கள் தங்கிப் பயிலும் பள்ளிகள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
Average Rating