பண்ருட்டியில் திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயர் விபத்தில் பலி!!
பண்ருட்டி ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). என்ஜினீயர். இவரது மனைவி கனகா. கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பிரேம்குமாரின் தந்தை விஜயகுமார் பண்ருட்டி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று இரவு 10.30 மணிக்கு விஜயகுமார் காய்கறி ஏற்றுவதற்காக காலி பெட்டிகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு பண்ருட்டி மார்க்கெட்டுக்கு புறப்பட்டார். மினி லாரியை விஜயகுமார் ஓட்டிச்சென்றார். அவருக்கு உதவியாக பிரேம்குமார் அந்த லாரியின் பின் பகுதியில் காலி பெட்டிகளின் மேல் நின்று கொண்டு வந்தார்.
சிறிது தூரம் சென்றபோது மினி லாரியில் இருந்து தடுமாறி பிரேம்குமார் கீழே விழுந்தார். இதில், அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து அவரது மனைவி கனகா மற்றும் பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார்.
Average Rating