தற்கொலை செய்த மாணவி உடல் இன்று பரிசோதனை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த ஒத்தப்பனை என்ற ஊரை சேர்ந்தவர் வேலுமணி. இவரும் இவரது மனைவி சரஸ்வதியும் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள். மூத்த மகள் ரேவதி வெப்பிலியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு போய் படித்து வருகிறார். இளைய மகள் உமாவதி, சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். மேலும் அதே பள்ளியில் இவரது தம்பி கார்த்தி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான்.
கடந்த திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி உமாவதி ஒருவித வேதனையுடன் காணப்பட்டார்.
நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி உமாவதி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்க அவர்கள் பதறியடித்தப்படி ஓடி வந்தனர்.
மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். சனிக்கிழமை நடந்த சிறப்பு வகுப்பிற்கு மாணவி உமாவதி செல்லவில்லையாம். இதனால் அவரை ஆசிரியை கண்டித்தாராம். இதனால் தான் அவர் மனம் உடைத்து தற்கொலை செய்து கொண்டாள் என்று எண்ணி மாணவியின் உறவினர்கள் ஒத்தப்பனை பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தற்கொலை செய்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லவும் விடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் கொடுமுடி இனஸ்பெக்டர் முருகேசன், ஆகியோரும் வந்து மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர்.
தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கொடுத்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பிறகு நேற்று இரவு மாணவி உமாவதி உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வேனில் கொண்டு வரப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை மாணவி உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையொட்டி ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் கண்ணீருடன் குவிந்திருந்தனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
உடல் பரிசோதனைக்கு பிறகு மாணவி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating