இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்: புதிய ஆய்வில் தகவல்!!
இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை. பாலூட்டி சீராட்டி தாய் தந்தையால் வளர்க்கப்படும் குழந்தை, வயது வந்தவுடன் தன் மனம்போன போக்கில் அவர்களை காயப்படுத்தும் நிலை நம் சமூகத்தில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக ஆதரவின்றி வீதியில் அலைமோதும் முதியோர்களை சாலையோரம் நடந்து செல்லும்போது காணலாம்.
பரபரப்புடன் கூடிய நவீன மயமான இந்த உலகில் உறவுக்கு அவசியமில்லை என்ற வாதம் சமீபகாலமாக உறக்க கேட்கத் தொடங்குகின்றன. இதன் விளைவாக முதியோர் காப்பகம் நகருக்கு நகர், வீதிக்கு வீதி என புற்றீசல் போல முளைக்கின்றன. பெற்றோர்களை அன்புடன் பாதுகாக்கத் தவறிய சில உறவுகள், சில ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி தங்கள் கடமைகளை முடித்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உள்ள மனித உரிமைகள் என்ற தலைப்பில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆண் பெண் என்று வயாதன இருபாலர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 5 ஆயிரம் முதியோர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 65 சதிவிகிதம் முதியோர்கள் உறவுகளால் புறக்கணிக்கப்படுவது தெரியவந்தது. 54.1 சதவிகிதம் பேர் குடும்பம் மற்றும் சமுதாயத்தினால் ஒதுக்கப்படுகின்றனர். 23.5 சதவிகிதம் முதியோர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாதவும், 89.7 சதவிகிதம் பேர் பொருளாதார ரீதியாக தவறாக நடத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
என்ற வாசகங்களை வெறும் ஏட்டளவில் படித்ததோடு நில்லாமல், நம் மனதில் உணர்ந்தாலே நம் சமூகத்தில் இருந்து இப்பிரச்னைகள் அடியோடு களையப்படும்.
Average Rating