சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது!!
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.
தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த வேளையில், மராட்டியத்தில் டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘அவர் அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்தினருடன் ஆனந்தமாக இருப்பதாக’ கருத்து பதிவிடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்ற தேவேந்திர பட்னாவிஸ், அங்கு தன்னுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா நிர்வாகி சஞ்சய் பாண்டே, போலீசில் புகாரளித்தார்.
அந்த புகாரில், ‘‘சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் அனைத்தும் கடந்த 2011-12-ம் ஆண்டில் தேவேந்திர பட்னாவிஸ் குடும்பத்தினருடன் கோவா சென்றபோது எடுத்த படங்கள். ஆனால், அவற்றை அஜய் ஹத்தேகர் என்பவர் இப்போது வெளியிட்டு அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்’’ என்று குறிப்பிட்டிருந்தது.
இதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் குடும்ப படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அஜய் ஹத்தேகரை தேடிவந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating