மேற்கு வங்காளத்தில் பச்சிளங் குழந்தையின் கை விரலை வெட்டிய நர்ஸ்!!
மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் கை விரலை நர்ஸ் ஒருவர் தவறுதலாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு தினஜ்புர் மாவட்டத்தில் உள்ள பாலுர்கத் அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததால் நேற்று மாலை குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் கையில் இருந்த மருந்துக் கட்டை நர்ஸ் ஒருவர் கத்தரியால் வெட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்குழந்தை மேல் சிகிச்சைக்காக சிலிகுரியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்குழந்தையின் தாய் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்குச் சென்று இது தொடர்பாக நர்சிடம் கேட்டேன். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று அந்த நர்ஸ் தெரிவித்தார். பின்னர் நான் அங்கு தேடிய போது குழந்தையின் கைவிரல் குப்பைத் தொட்டியில் கிடந்தது” என்றார்.
Average Rating