ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை: பிரதமருக்கு பாதிக்கப்பட்ட சிறுமி கோரிக்கை!!
ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து கொல்லப்படுவதால் அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரமங்களை அமைத்து ஆன்மிகவாதியாகவும், யோகாசன ஆசானாகவும் வலம்வந்த ஆசாராம் பாபு(73) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த (இச்சம்பவத்தின்போது 16 வயது சிறுமியாக இருந்த) இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்.
கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தொடர்ந்து தாக்கல் செய்திருந்த பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு எதிரான போலீஸ் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த கிர்பால் சிங்(35) என்பவரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி மாவட்டம், ஷாஜஹான்பூரில் உள்ள புவாயான் பகுதியில் கடந்த பத்தாம் தேதி வழிமறித்த மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
இவருடன் சேர்த்து, ஆசாராம் பாபுவுக்கு எதிரான இதே வழக்கில் சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த மூன்று பேர் கொலையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆசாராம் பாபுவுக்கு எதிரான அரசு தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து கொல்லப்படுவதால் அவர் மீதான கற்பழிப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தி, தனக்கு நீதி கிடைக்க தேவையான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமி இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating