போரூரில் பாட்டியை குத்தி கொன்ற பெண் என்ஜினீயர் கைது!!
போரூர் சக்திநகர் பார்வதி அவென்யூ 3–வது தெருவை சேர்ந்தவர் சுப்பையன்.
முன்னாள் ராணுவ வீரரான இவர் கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர் திருவாரூரில் நர்சாக பணிபுரிகிறார். அங்கேயே அறை எடுத்து தங்கியிருந்தார்.
இவர்களது மகள் கனிமொழி. இவர் திருவாரூரில் தாயாருடன் தங்கியிருந்து என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு போரூர் வந்து தந்தையுடன் தங்கியிருந்தார். சுப்பையனுடன் அவரது தாயார் மங்களமும் (76) வசித்து வந்தார்.
கடந்த 10–ந்தேதி சுப்பையன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மங்களமும், கனிமொழியும் தனியாக இருந்தனர். இந்த நிலையில் வீட்டில் மங்களம் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து மங்களத்தை கத்தியால் குத்தியதாக பேத்தி கனிமொழி போலீசில் தெரிவித்தார்.
அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கனிமொழியே தனது பாட்டி மங்களத்தை கொலை செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கனிமொழி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–
நான் எனது தாயாருடன் திருவாரூரில் தங்கியிருந்து என்ஜினீயரிங் முடித்துள்ளேன். கடந்த 20 நாட்களுக்கு முன்பு போரூர் வந்து தந்தையுடன் தங்கியிருந்தேன். சிறு வயதில் இருந்தே எனது பாட்டிக்கு மகள் வழி பேத்திகளை தான் பிடிக்கும். என்னை பிடிக்காது.
அதனால் நான் எனது தாயாருடன் தங்கி இருந்து படித்தேன். தற்போது பாட்டி என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தார். கடந்த 9–ந்தேதியும் என்னை திட்டினார். நான் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து என்னை அடித்தார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
10–ந்தேதி இரவு பாட்டி தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தனது பாதுகாப்புக்காக கத்தி ஒன்றையும் அருகில் வைத்திருந்தார். அப்போது நான் ஆக்சா பிளேடின் பின்பிற கட்டையால் அவரது தலையில் தாக்கினேன். அவர் உடனே திடுக்கிட்டு எழுந்து யாரோ தன்னை அடிப்பதாக நினைத்து கத்தியை தூக்கினார். உடனே நான் அவருடன் மோதலில் ஈடுபட்டு கத்தியை பிடுங்கிக்கொண்டேன். அந்த கத்தியால் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் குத்திக்கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘திருவாரூரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் கனிமொழி போனில் பேசியுள்ளார். இதை தட்டிக்கேட்டதால் பாட்டியை அவர் கொலை செய்துள்ளார்’’ என்றனர்.
Average Rating