குரங்கு மீது சங்கிலி பறிப்பு வழக்கா?: மண்டையை சொறியும் போலீசார்!!
பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்ததாக குரங்கு மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் குழம்பிப்போய் உள்ளனர்.
இங்குள்ள கான்பூர் மாவட்டத்தின் கவுசல்புரி சேர்ந்த ஊர்மிளா சக்சேனா என்ற பெண் நேற்று மாலை கோயிலுக்கு சென்றார். அப்போது மரத்தில் இருந்து இறங்கிவந்த ஒரு குரங்கு திடீரென்று ஊர்மிளாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்தது.
குரங்கிடம் சங்கிலியை பறிகொடுக்காமல் இருக்க அவர் கடுமையாக போராடினார். அவருடன் ஒரு சமரசத்துக்கு வந்த குரங்கு, ‘உனக்கு பாதி – எனக்கு பாதி’ என்று பாதி சங்கிலியை அறுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடி மரத்தில் ஏறிக் கொண்டது.
இச்சம்பவம் தொடர்பாக நசிராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஊர்மிளா, இச்சம்பவம் தொடர்பாக அந்த குரங்கின் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து, பறிபோன தங்கச் சங்கிலியை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செயின் பறிப்பு தொடர்பாக பிரபல ரவுடிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து, நகைகளை பறிமுதல் செய்வதே பெரும்பாடாக உள்ள நிலையில், குரங்கின் மீது எந்த சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்வது? அந்த ‘செயின் ஸ்னாட்சிங் குரங்கை’ எந்த மரத்தின் மீது ஏறி கைது செய்வது? என்று நசிராபாத் போலீசார் குழம்பிப்போய் உள்ளனர்.
Average Rating