மதுரையில் சகாயம் குழு அதிகாரி அறையில் புகுந்த மர்ம நபர்!!
சகாயம் விசாரணைக் குழுவில் பணியாற்றும் அதிகாரியின் அறையில் ‘மர்ம’ நபர் புகுந்து உளவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
அவரது விசாரணைக் குழுவில் சென்னை அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானி தேவசேனா பணியாற்றி வருகிறார். இவர் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணியை கவனித்து வருகிறார். இவருக்கு மதுரை அரசு விருந்தினர் மாளிகை பழைய கட்டிடத்தில் அறை எண் 4 ஒதுக்கப்பட்டுள்ளது.
தேவசேனாவுக்கு உதவியாக பணியாற்றுபவர் பக்தவச்சலம். இவர் இதே கட்டிடத்தில் வேறு அறையில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இருவரும் அறிக்கை தயாரிக்கும் பணிக்காக பூமாலை வணிக வளாகத்தில் உள்ள சகாயம் அலுவலகத்துக்கு வந்தனர். இரவு விருந்தினர் மாளிகை அறைக்கு சென்றபோது பக்தவச்சலம் அறையில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் சூட்கேஸ் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் கீழே கொட்டப் பட்டு இருந்தது. ஆனால் எந்த பொருளும் திருடு போகவில்லை.
இந்த அறையின் பின் வாசலை திறந்து யாரோ ‘மர்ம’ நபர் அறைக்குள் புகுந்து உளவு பார்த்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சகாயம், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
தேவசேனா, கிரானைட் விசாரணை அறிக்கை தொடர்பான தகவலை அறையில் வைத்திருக்கலாம் என்று கருதி ‘மர்ம’ நபர் உளவு பார்த்ததாக, விசாரணைக் குழுவில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறைக்கு பின்வாசல் வழியாக வந்து செல்ல வழி இருக்கிறது. இதன் அடுத்த கட்டிடத்தில்தான் சகாயம் தங்கி உள்ளார்.
விருந்தினர் மாளிகையில் 24 மணி நேரமும், அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். போலீஸ் பாதுகாப்பும் உள்ளது. ஏற்கனவே சகாயம் குழு விசாரணை நடத்தும் பூமாலை வணிக வளாகத்தில் ‘மர்ம’ நபர்கள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், விசாரணை அதிகாரிகள் தங்கி இருந்த அறையிலும் உளவு பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating