அர்ஜென்டினா ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மனைவி வெற்றி பெற்றார்: நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு பெற்றார்
அர்ஜென்டினா நாட்டு ஜனாதிபதி தேர்தலில் இப்போதைய அதிபரின் மனைவி கிறிஸ்டினா பெர்னான்டஸ் வெற்றி பெற்றார். அவர் தான் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார். அர்ஜென்டினா நாட்டின் இப்போதைய அதிபராக இருப்பவர் நெஸ்டடர் கிர்ச்னர். இவர் 2001-ம் ஆண்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்டவர் ஆவார். அவரது பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அவர் மனைவி கிறிஸ்டினா பெர்னான்டஸ் போட்டியிட்டார். 54 வயதான அவரை எதிர்த்து, முன்னாள் பொருளாதார மந்திரி ராபெர்ட்டோ லவக்னா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எலீசா கேரியோ ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 42.5 சதவீத ஓட்டுக்கள் பெற்று கிறிஸ்டினா பெர்னான்டஸ் வெற்றி பெற்றார். ராபெர்ட்டோ 20.1 சதவீத ஓட்டுக்களும், எலீசா கேரியோ 19.8 சதவீத ஓட்டுக்களும் பெற்று தோல்வி அடைந்தனர். இந்த வெற்றி மூலம், கிறிஸ்டினா தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் ஆவார். தேர்தல் முடிவு வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் முரசுகளை முழங்கியபடி சந்தோஷ ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்தியில் தன் கணவர் உடன் கிறிஸ்டினா தோன்றினார். அவர் ஆதரவாளர்கள் தேசியக்கொடிகளையும், பதாகைகளையும் கைகளில் தாங்கியபடி அவற்றை அசைத்துக்கொண்டே இருந்தனர். கிறிஸ்டினா தன் கணவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுகிறார். ஏழைகளுக்காக கிர்ச்னர் வீடுகள் கட்டிக்கொடுத்தது போல கிறிஸ்டினாவும் ஏழைகளுக்கு உதவிகள் செய்வார் என்று 50 வயது தொழிலாளி ரமோன் ரெக்கி தெரிவித்தார்.