பீகாரில் திருடனை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம்: டிஸ்மிஸ் ஆன 2 போலீசாரும் நிரபராதிகள்; சட்டமன்ற விசாரணைக் குழு அறிவிப்பு
பீகாரில் திருடனை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவத்தில் டிஸ்மிஸ் ஆன 2 போலீசாரும் நிரபராதிகள் என்று சட்டமன்றக் குழு அறிவித்து உள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் உள்ளது நாத் நகர். இங்கு முகமது அவுரங்க சீப் என்ற வாலிபர், தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துக் கொண்டு ஓடிய போது பொதுமக்கள் கையில் சிக்கினார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர் அங்கு விசாரணைக்கு வந்த போலீசாரின் மோட்டார் சைக்கிளில் அவரை கயிற்றால் கட்டி விட்டனர். உடனே போலீசாரும் வாலிபர் அவுரங்க சீப்பை மோட்டார் சைக்கிளில் கட்டிய நிலையில் தெருவில் தரதரவென இழுத்துச் சென்றனர். இதில் அவருக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு அலறினார். கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் சில தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். அதையடுத்து வாலிபரை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து சென்ற போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் எல்.பி.சிங், போலீஸ்காரர் ராமச்சந்திர ராய் ஆகியோர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் பற்றி மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாசுதேவ் பிரசாத் சிங் தலைமையிலான 5 உறுப்பினர் சட்டமன்ற குழுவும் விசாரணை நடத்தியது.
நிரபராதிகள் என அறிவிப்பு
இந்நிலையில் இந்த சம்பவத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் எல்.பி.சிங்கும், போலீஸ்காரர் ராமச்சந்திர ராயும் நிரபராதிகள் என்று சட்டமன்றக் குழு நேற்று அறிவித்தது.
பொதுமக்கள், வாலிபர் முகமது அவுரங்க சீப்பை சரமாரியாக தாக்கி மோட்டார் சைக்கிளில் கட்டி விட்ட நிலையில், அவரை காப்பாற்றவே இந்த 2 போலீசாரும் முயன்று உள்ளனர். இருப்பினும் வாலிபர் துன்புறுத்தப்பட்டதில் இவர்களுக்கும் ஓரளவு பங்கு உள்ளது.
எனினும் அதற்காக இவர்கள் இரண்டு பேருக்கும் தரப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது. இவர்களை எச்சரிக்கை செய்தோ அல்லது ஒரு சம்பள உயர்வை ரத்து செய்தோ வேலையில் மீண்டும் அமர்த்த வேண்டும் என்று சட்டமன்றக் குழு கூறி உள்ளது.