கிளேமோர் குண்டு தொடர்பாக கைதான 2 தமிழ் பெண்களின் அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு
வீட்டு வளவினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் பெண்கள் இருவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாதென உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்துவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்க தலைமையில் சக நீதியரசர்களான அன்ரூ சோமவன்ச, பாலபட்ட பெந்தி ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும் ராஜகிரியவில் நீண்ட காலமாக வசித்து வருபவர்களுமான கணேசநாதன் ஷ்ரீதேவி (வயது 28), மல்லிகாதேவி விக்னேஸ்வரன் (வயது 53) ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களையே விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. மனுதாரர்கள் இருவரும் மூன்று மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபோது மனுதாரர்களில் ஒருவரான ஷ்ரீதேவி கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தாரெனவும் அவருக்கு பிறந்த குழந்தை எவ்வித குற்றமும் இழைக்காமலேயே சிறைவாசம் அனுபவிப்பதாகவும் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
கர்ப்பிணி என்பதைக்கூட கருத்தில் கொள்ள தவறிய பொலிஸார் ஷ்ரீதேவிக்கு குழந்தையை பிரசவிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லையெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றைய மனுதாரர் ஷ்ரீதேவியின் மாமியார் ஆவார். இம் மனுதாரர்களின் வீட்டில் வசித்து வந்த சிறுவர் அல்லாத அங்கத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம் மனுதாரர்களில் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, கைதை மேற்கொண்டவரான பொறளை பொலிஸ் நிலைய பிரதம இன்ஸ்பெக்டர் கமல புஷ்பகுமார, பாதுகாப்பமைச்சு செயலாளர், சிறைச் சாலைகள் அத்தியட்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
மனுதாரர்களை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி வேலுப்பிள்ளை பொன்னம்பலத்தின் நெறிப்படுத்தலின் சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் தியாகர் திருநாவுக்கரசு ஆஜராகி வாதாடினார்.