யுனெஸ்கோ உயர் நிர்வாக அதிகார சபையின் பிரதிநிதியாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவு
யுனெஸ்கோ உயர் நிர்வாக அதிகார சபையின் பிரதிநிதிகளில் ஒருவராக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்ததுடன், இதற்கு இலங்கையின் மீது யுனெஸ்கோ வைத்துள்ள கௌரவமும் விசுவாசமுமே காரணமெனவும் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; யுனெஸ்கோவின் உயர் நிர்வாக அதிகார சபைக்கான பிரதிநிதிகள் உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்படுகின்ற நிலையில் இதற்கான தேர்தல் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றபோதே அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவுசெய்யப்பட்டார். தேர்தலில் 170 வாக்குகளில் 130 வாக்குகள் அமைச்சருக்கு சார்பாக அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை இரண்டாவது தடவையாகவும் பிரதிநிதியாகியுள்ளது. இது இலகுவான விடயமல்ல. உறுப்பு நாடுகள் இலங்கை மீதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு மீதும் வைத்துள்ள கௌரவமும் விசுவாசமுமே காரணம்.
அத்துடன், இலங்கை சகல உறுப்பு நாடுகளுடனும் கல்வி, கலாசாரம் மற்றும் விஞ்ஞானம் தொடர்பில் இணைந்து அபிவிருத்தியடைவதற்கு அடுத்து வரும் நான்கு வருடங்களும் பணியாற்றுமெனத் தெரிவித்தார்.
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த
இதன்போது அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பேசுகையில்;
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு 100 வீத கல்வியறிவு என்ற யுனெஸ்கோவின் இலக்கை 2011 இல் எட்டுவோம். கல்வி அறிவு நாட்டில் உயர் நிலையில் இருப்பதாலும் மற்றும் சுகாதார சேவைகளை அரசு வழங்குவதாலுமே உயிர் வாழும் காலப்பகுதி இருபாலாருக்கும் நாட்டில் அதிகரித்திருக்கிறது.
அத்துடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் மற்றும் சிறிய நாடுகளிலும் யுனெஸ்கோவின் இலக்கை எட்டுவதற்கு இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.