சிவகாசி: வேன் விபத்தில் பலியான 6 பெண்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த முனியசாமி மனைவி விஜயகுமாரி (வயது27), குருசாமி மனைவி கனகம்மாள் (45), கருப்பையா மனைவி இருளம்மாள் (70), ஐசக் ராஜா மனைவி பரமேஸ்வரி (33), பெருமாள் மனைவி காளியம்மாள் (70) சிவகாசியை சேர்ந்த மதியழகன் மனைவி முருகேசுவரி (35) ஆகியோர் மேட்டமலை இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.
நேற்று மாலை பணி முடிந்துவிட்டு ஆலைக்கு சொந்தமான வேனில் சக பெண் தொழிலாளிகளுடன் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். வேனை முத்துபாண்டி என்பவர் ஓட்டினார். மீனம்பட்டி குறுக்குச்சாலையில் ரோட்டோரத்தில் பட்டாசு கழிவுகளை அப்பகுதியினர் எரித்துக்கொண்டு இருந்தனர். இதனால் ரோடே தெரியாத அளவுக்கு கரும் புகை பரவி இருந்தது. ஆனாலும் வேன் டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக வேன் நிலைதடுமாறி எரிந்து கொண்டிருந்த பட்டாசு கழிவுகளுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வேனின் டீசல் டேங்க் வெடித்தது. சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீ மளமளவென பரவியது.
உடனே வேனில் இருந்த டிரைவர் முத்துப்பாண்டி உள்பட சிலர் தப்பினர். ஆனால் வேனின் பின் பகுதியில் இருந்த விஜயகுமாரி, கனகம்மாள், இருளம்மாள், பரமேஸ்வரி, காளியம்மாள், முருகேசுவரி ஆகிய 6 பேரும் வெளியேற முடியாமல் வேனிலேயே சிக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 8 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த 6 பெண்களின் உடல்களும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல்கள் இன்று ஒப்படைக்கப்பட்டது.
விபத்தில் பள்ளப்பட்டியை சேர்ந்த 5 பெண்கள் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. பலியான பெண்கள் தினமும் கூலி வேலைக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என உறவினர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Average Rating