கணவரை பிடித்த ஷோபனா!
ஒரு வழியாக கணவரைக் கண்டுபிடித்து விட்டார் ஷோபனா. இன்டர்நெட் மூலமாக இந்த இணைப்பு நடந்துள்ளதாம். பழம்பெரும் நடிகை பத்மினியின் குடும்பத்தைச் சேர்ந்த ஷோபனா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அதன் பின் தன்னுடைய நடிப்பு மற்றும் டான்ஸ் திறமையால் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழி படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது, தமிழக அரசின் விருது உட்பட எண்ணற்ற விருதுகளுக்கும் சொந்தக்காரியாக ஷோபனா இருக்கிறார். ஷோபனாவுக்கு நடிப்பை விடவும் நாட்டியத்தில்தான் காதல் அதிகம். பரத நாட்டியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஷோபனா, சமீப காலமாக நடிப்பை விட்டு விட்டு முழு மூச்சாக நாட்டியத்தில் மூழ்கி விட்டார்.
சென்னையில் நாட்டிய பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் ஷோபனா, ஏராளமான நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
வயது ஏறிக் கொண்டே போவதால், திருமணம் செய்து கொள்ளுமாறு அவருக்கு நெருங்கியவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் ஷோபனாதான் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
இந்த நிலையில் அவருக்குள் திருமணப் பூ பூத்தது. இணையதளம் மூலம் அவரே மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். இந்த தேடுதல் வலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் மெஹ்ரான் என்ற தொழிலதிபர் சிக்கியுள்ளார்.
ராகுல் மெஹ்ரானை தொடர்பு கொண்டு தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஷோபனா. இதைக் கேட்ட ராகுல், உடனே சரியென்று தலையாட்டி, தற்போது ஷோபனாவை தீவிரமாக காதலித்து வருகிறாராம்.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், வெகு விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.
நாட்டியக் கலை போல நீடூழி வாழ வாழ்த்துவோம்.