சிறைக்குள் கைதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொன்றதாக இதர கைதிகள் போராட்டம் – உ.பி.யில் பரபரப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படோஹி மாவட்டச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதியை சிறை அதிகாரிகள் விஷம் வைத்து கொன்றதாக எழுந்த புகாரையடுத்து, அதே சிறையில் அடைபட்டிருக்கும் இதர கைதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை வழக்கில் கைதாகி படோஹியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விஜய் குமார் குப்தா(31) என்பவர் நேற்றிரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று காலை இதுபற்றிய தகவல் அறிந்து சிறைக்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறை அமைந்திருக்கும் சாலையை முற்றுகையிட்டனர்.
அடித்து, உதைத்து, சித்ரவதை செய்ததோடு சிறைக் காவலர்கள் அவரை விஷம் வைத்து கொன்று விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
விஜய் குமாரின் பிரேதத்தை சிறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சிறையில் இருந்த இதர கைதிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால், சிறை வாசலில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த உயரதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றனர். இதையடுத்து, விஜய் குமார் குப்தாவின் பிரேதம் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating