கமல் ரசிகர்கள் ரத்ததானம் – தொடங்குகிறார் கெளதமி
கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி (நவம்பர் 7), 4ம் தேதி அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவுள்ள ரத்ததான முகாமை கெளதமி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி வருகிறது. வழக்கமாக தனது பிறந்த நாளை நல உதவிகள் வழங்கும், உருப்படியான காரியங்களைச் செய்யும் நாளாக கமல்ஹாசன் கொண்டாடி வருகிறார். அன்றைய தினம் கமல்ஹாசன் ரசிகர்கள் ரத்ததானம், கண் தானம், அன்னதானம், ஏழை, எளியோருக்கு உதவிகளை செய்வது என சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி நவம்பர் 4ம் தேதி ரத்ததான முகாம் நடத்த கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இந்த முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் ரசிகர்கள் ரத்ததானம் செய்யவுள்ளனர். சென்னை புளியந்தோப்பு இந்து நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரத்ததான முகாமை கெளதமி தொடங்கி வைக்கிறார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தனபால் சிறப்பு விருந்தினராக இதில் பங்கேற்கிறார். ரத்ததான முகாம் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் குணசீலன், கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் செய்து வருகின்றனர்.