புதுவை அரசு பள்ளியில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது வழக்கு பதிவு!!
புதுவையை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 14). இவன் புதுவை திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 10–ந்தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். அப்போது வீட்டு பாடம் எழுதவில்லை என்று கூறி அறிவியல் ஆசிரியை ஜெயந்தி மாணவன் ராமச்சந்திரனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டுக்கு சோர்வாக வந்த ராமச்சந்திரனிடம் அவனது பெற்றோர் விசாரித்தனர். அப்போது ஆசிரியை பிரம்பால் அடித்த விவரத்தை கூறினான். சட்டையை கழற்றி பார்த்த போது முதுகு முழுவதும் வீங்கி போய் இருந்தது. இதனால் பதறிய மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் இதுபற்றி கேட்டனர். ஆனால் இதற்கு தகுந்த காரணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியை ஜெயந்தி கூறவில்லை.
இதையடுத்து இதுபற்றி ஒதியஞ்சாலை போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால், அந்த புகார் மனுவையும் போலீசார் ஏற்கவில்லை. இதனால் மாணவன் ராமச்சந்திரனின் பெற்றொர் இதுபற்றி குழந்தைகள் நல அமைப்பிடம் முறையிட்டனர். இதையடுத்து இதன் மீது விசாரணை நடத்திய குழந்தைகள் நல அமைப்பு அதிகாரி டாக்டர் வித்யாராமன் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை ஏற்று போலீசார் ஆசிரியை ஜெயந்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating