அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் பிரபாகரனை விடுதலை வீரரென தெரிவிப்பு: நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து அந்த நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் மீதான வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்கப் பிரதிநிதிகளை விடுவிப்பதற்காக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் பிலிப் போல்ரன், றொபேட் ஸ்ற்ரே (Philip Bolton, Robert Stray) எனப்படும் சட்டத்தரணிகள்ஆஜராகி மேற்படி புலிகள் இயக்கக் குற்றவாளி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்திற்கு எதிராக ஆற்றிய எதிர்த்தரப்பு வாதத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் பயங்கரவாதியினர் அல்ல எனவும் அவர்கள் சார்ந்த விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல எனவும் கூறியுள்ளனர். அத்துடன், புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒரு பயங்கரவாதி இல்லை எனவும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் எனவும் அவுஸ்திரேலியாவில் பிரபலமான மேற்படி இரண்டு சட்டத்தரணிகளும் மெல்போர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இவ்வாறு பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என அவுஸ்திரேலிய பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவர்களின் நிதிசேகரிப்பு மற்றும் செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்ல ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு சார்ந்த செயற்பாடுகளே எனக் கூறிய மேற்படி சட்டத்தரணிகளின் வாதம் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், குற்றவாளிகளை விடுவிக்கும் சட்டத்தரணிகளின் முயற்சி கைகூடவில்லை.
அதுமட்டுமன்றி, அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றிய புலன்விசாரணைகள், தேடுதல்களை நடத்திவரும் ஸ்ரீலங்கா இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் விபரங்களையும் மற்றும் ஸ்ரீலங்கா தூதுவர் பற்றிய விபரங்களையும் அறிந்துகொள்வதற்காக மேற்படி சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் செய்த கோரிக்கையும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதுபற்றி அவுஸ்திரேலிய நீதிமன்றத்தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப, இவ்வாறு சர்வதேச பயங்கரவாத இயக்கமாகிய புலிகள் இயக்கத்தின் ஏஜன்டுகளை விடுவிப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினரினதும் புலனாய்வு உத்தியோகத்தர்களினதும் பெயர் விபரங்கள் அவர்களின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு விபரங்களைக் கோரும் உரிமை அவுஸ்திரேலிய நாட்டின் சட்டத்தரணிகளுக்கு இல்லை எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.