குரங்கின் தயவால் கோயில் அருகே பெய்த பணமழை: பக்தர்கள் பரவசம்!!
உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பன்கே பிஹாரி கோயில் அருகே ஒரு பெண்ணின் பணப்பைக்குள் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற குரங்கு அவற்றை மரத்தின் மீதிருந்து அள்ளிவீசியதால் அங்கு பெய்த 500 ரூபாய் நோட்டு மழையால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மும்பையை சேர்ந்த அந்த 50 வயது பெண் இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது, கோயில் நடை சாத்தியிருந்தது. நடை திறப்பதற்காக வெளியே காத்திருந்தபோது அவரது கைப்பையை பறித்துக் கொண்டு அருகாமையில் உள்ள மரத்தின் மீது தாவியேறிய குரங்கு அதில் இருந்த மூன்று 500 ரூபாய் கட்டுகளை பிய்த்து கீழே எறியத்தொடங்கியது.
திடீரென்று அப்பகுதியில் பெய்த பணமழையால் அங்கு காத்திருந்த பக்தர்கள், பரவசமும் பரபரப்பும் அடைந்தனர். இந்த பரபரப்பில் கீழே விழுந்து கிடந்த பணத்தை எடுக்க குனிந்த ஒரு பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க செல்போனை யாரே ‘பிக் பாக்கெட்’ அடித்துவிட, பரபரப்பு இருமடங்காக கூடியது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக மதுராவில் உள்ள பிருந்தாவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்புறத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பொதுமக்கள் வாங்கித்தரும் தின்பண்டங்களை குறிவைத்து சுமார் 10 ஆயிரம் குரங்குகள் இங்கே வாழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating