வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!!
வேலூர் கிரீன் சர்க்கிள் துர்க்கயைம்மன் கோவில் அருகே நடைபாதையில் தற்காலிக கூடாரம் அமைத்து சிலர் நாட்டு வைத்தியம் செய்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் வெங்கடேசன்–திரிஷா தம்பதியின் 2வது மகன் தனுஷ் (1) நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குழந்தையை கடத்தி சென்ற மர்ம கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கவே குழந்தையை மர்ம கும்பல் கடத்தி சென்றதாக பரபரப்பு தகவல் வெளியானது.
கடத்தப்பட்ட குழந்தையின் தாத்தா சுப்பிரமணி மற்றும் வெங்கடேசன்(40) என்பவர்கள் அரிய விலங்குகளை வேட்டையாடி அதன் மூலம் மூலிகை மருந்துகளை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக வேலூர் வனத்துறையினருக்கு வந்த தகவலின்படி வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் 6 காட்டு முயல்கள், 3 குள்ளநரியின் தோல்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சுப்பிரமணி மற்றும் வெங்கடேசனை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் காட்பாடி அடுத்த பனமடங்கி, லத்தேரி வனப்பகுதிகளில் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாகவும், அதற்கு அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் உதவியதாகவும் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாட ஒத்துழைப்பு கொடுத்த 3 பேரை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதில் வனத்துறையினரிடம் இருந்து தப்பிக்க சுப்பிரமணியனின் பேரனை கடத்தி சென்று அதன் மூலம் வெங்கடேசனை அந்த கும்பல் மிரட்டி வருவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கடத்தல் கும்பல் குறித்து முக்கிய தகவல்களை சேகரித்த போலீசார் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒரு குழந்தையை பெரியவர் ஒருவர் விட்டு விட்டு கழிப்பறைக்கு சென்று வருவதாக அங்குள்ள கடைக்காரரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்திய போது கடத்தப்பட்ட குழந்தை தனுஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோரை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர். மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating