ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கோவில் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை!!
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது. இதில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் இன்று காலை ஒரு இளம்பெண்ணின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் போலீசாரும் விரைந்து வந்து தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
பிணமாக மிதந்த இளம்பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் நைட்டி அணிந்து இருந்தார். குளத்தின் படியில் அவர் அணிந்திருந்த செருப்புகள் கிடந்தன.
பிணமாக மிதந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக மிதந்த பெண் வீரப்பன்சத்திரம் ராஜாஜி வீதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகள் ரம்யா (26) என தெரிய வந்தது. ரம்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
ரம்யாவுக்கு ஒரு அக்காள், ஒரு தம்பி உள்ளனர். அக்காள் திருப்பூரில் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தம்பி பெங்களூரில் வேலைப் பார்த்து வருகிறார். தந்தை பாஸ்கரன் தறி பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு தந்தை பாஸ்கரனுக்கும், ரம்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ரம்யா, கோவில் தெப்பக்குளத்துக்கு சென்று குதித்து தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் ரம்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தெப்பக்குளத்தில் இளம்பெண் பிணமாக மிதந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating