அசாமில் கொடூரம்: சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கிராம மக்கள்!!
மூடநம்பிக்கைக்கும், காட்டுமிராண்டித்தனத்துக்கும் பெயர்போன அசாம் மாநிலத்தில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 60 வயது பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சோனிட்பூர் மாவட்டம், விமாஜுலி கிராமத்தில் வாழ்ந்துவந்த மோனி ஓராங்(60) என்ற அந்தப் பெண் பில்லி, சூனியம், செய்வினை போன்ற மாந்தரிக வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவளை ஒழித்துக் கட்டினால்தான் நமது கிராமம் நன்றாக இருக்கும் என்றும் உள்ளூர் கோயில் பூசாரி ஒருவர் தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மோனியின் வீட்டை முற்றுகையிட்டனர். அவரை வெளியே இழுத்துப் போட்டு, அடித்து, உதைத்து தாக்கினர். கூட்டத்தில் இருந்த ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் மோனியின் கழுத்தை ஓங்கி வெட்டினான்.
தலை துண்டிக்கப்பட்ட மோனி, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்து அந்த கிராமத்துக்கு விரைந்துவந்த போலீசாரை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் தடை செய்தனர். பின்னர், கூடுதல் போலீஸ் படை துணையுடன் கூட்டத்தை அடித்து, விரட்டிய போலீசார் மோனியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோரப் படுகொலை சோனிட்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating