சொத்தை பிரித்து கேட்டு தொல்லை: மகனை வெட்டி கொன்ற தந்தை
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகில் உள்ள அழகர் நாயகன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). விவசாய கூலிதொழிலாளி. இவரது மகன் கந்தவேல் (40). இவருக்கு திருமணம் ஆகி சுசிலா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கந்தவேல் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார்.
இதனால் வருமானமின்றி குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட அவரது மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் குடிப்பழக்கத்தை கைவிடாததால் தனது 2 மகள்களை அழைத்துக்கொண்டு அய்யலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் பலரிடம் கடன் வாங்கியிருந்த கந்தவேலுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கந்தவேல் தனக்குரிய சொத்தை பிரித்து தரும்படி தந்தையிடம் கேட்டார். சொத்தை தந்தால் அதனை விற்று குடித்து சீரழித்து விடுவாய் என்று அவர் மறுத்தார்.
எனினும் சொத்தை பிரித்து தர கேட்டு கந்தவேல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
நேற்று இரவு தந்தை–மகனுக்கும் இடையே இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த கந்தவேல் பின்னர் அங்குள்ள நாடக மேடையில் தூங்க சென்று விட்டார்.
ஆத்திரத்தில் இருந்த பழனிச்சாமி இன்று அதிகாலை எழுந்ததும் அரிவாளுடன் மகனை தேடிச்சென்றார். நாடக மேடையில் தூங்கிக்கொண்டிருந்த அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கந்தவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பழனிச்சாமி பின்னர் ரத்த கறை படிந்த அரிவாளுடன் ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மகனை வெட்டி கொன்று விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து கந்தவேலின் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து தகராறில் தந்தையே மகனை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating