எனது பெயரில் பஸ்களை பெறவில்லை – ஜனாதிபதியும் இதற்கு பொறுப்பு!!
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இ.போ.ச பஸ்களை பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமாக தன்னை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதுடன் அனைத்து விதமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விடயத்தில் அவரும் சம்பந்தப்படுவார் என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரச்சார நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதுடன் அதற்கான 1425 லட்சம் ரூபா கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என்பதற்காக சுசில் பிரேமஜயந்த மீது வழக்கு பதிவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் பஸ்களை பெற்றுக் கொண்டதாக தனது பெயரில் எந்த இடத்திலும் பதிவாகி இல்லை என்பதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அவற்றுக்கு முற்பணம் செலுத்தியவர்கள் மீது வழக்கு தொடுக்குமாறும், பொலிஸார் செய்ய வேண்டிய வேலைகளை அமைச்சரவை எவ்வாறு செய்ய முடியும் என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
Average Rating