விமானத் தாக்குதலில்(?) புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி!!
கிளிநொச்சியில் இன்று காலை இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் பலியானார். முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது நேற்று இலங்கை விமானப்படை கடும் தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய பயிற்சி முகாம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை விமானங்கள் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் பலியானார். இத் தகவலை விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையக பொதுச் செயலாளர் சீரன் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 6 மணிக்கு இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மரணமடைந்தார். அவருடன் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் பலியானார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுப. தமிழ்ச் செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். அதன் நார்வே தூதுக்குழுவின் ஏற்பாட்டின் பேரில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் அமைப்பின் சார்பில் சென்ற குழுக்களுக்கு தமிழ்ச் செல்வனே தலைமை தாங்கிச் சென்றார். விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் பலியானது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
**மேற்படி ஆறுபேரும் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் பலியானதாக புலிகள் தரப்பினர் தெரிவிக்கின்ற போதிலும் இது உள்வீட்டுச் சதியாகவும் இருக்கலாமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.