சித்தூரில் நாய் குரைத்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை!!
சித்தூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் ருக்மணி. இவரது மகன் மணி (வயது26). கட்டிட மேஸ்திரி. இவர்கள் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதனால் எதிர்வீட்டை சேர்ந்த நாகராஜனுக்கும், மணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நாகராஜன் ஏற்கனவே சொத்து தகராறில் மைத்துனனை கத்தியில் வெட்டிய வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையானவர்.
இந்த நிலையில் நேற்றிரவு நாய் மீண்டும் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், நாயை அடித்து விரட்டுமாறு மணியிடம் கூறி தகராறில் ஈடுபட்டார்.
தகராறின்போது மணிக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த துளசிராம் (வயது 28), பிரகாஷ் (32) ஆகிய 2 பேரும் வந்து நாகராஜனிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மணி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் ஓட ஓட சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த துளசிராம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மணியும், பிரகாசும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த சித்தூர் டி.எஸ்.பி. லட்சுமி நாயுடு தலைமையிலான போலீசார் கொலையாளி நாகராஜனை கைது செய்தனர்.
மேலும் படுகாயமடைந்த மணி, பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இறந்த துளசிராம் உடலை மீட்டு சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating