ஆசிரியை கண்ணில் மண்ணை தூவி நகை பறிப்பு
நாங்குநேரி அருகே பள்ளிக்கு பணிக்கு சென்று வீடு திரும்பிய ஆசிரியையின் கண்ணில் மண்ணை தூவி நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். விஜயநாராயணம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மேரிலதா பார்ப்பரம்மாள் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். அருகில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து செல்வதை வழக்கமாக கொண்ட மேரிலதா சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 மர்ம நபர்களில் ஒருவன் இறங்கி வந்து மேரிலதா கண்ணில் மண்ணை தூவினான். அதன்பிறகு இருவரும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து விஜயநாராயணம் காவல் நிலையத்தில் மேரிலதா புகார் செய்தார். இந்த வழிப்பறி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.