இந்தியா வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த 21 நேபாள பெண்கள் மீட்பு!!
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்திச் செல்ல முயன்ற 21 நேபாள பெண்களை போலீசார் இன்று அதிரடியாக மீட்டனர்.
மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அங்குள்ள மஹிபால்பூர் என்ற இடத்தில் 21 பெண்களை மறைத்து வைத்திருப்பதாக தெரிய வந்தது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்களை மீட்டனர். அப்பெண்களுக்கு 20 வயது முதல் 35 வயது வரை இருக்கும்.
சில நாட்களுக்கு முன் துபாய்க்கு செல்ல இருந்த 7 நேபாள பெண்களை விமானநிலைய போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, தங்களை ஏஜெண்டுகள் கடத்தி வந்ததாக அவர்கள் கூறினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் இந்தியா வழியாக துபாய்க்கு சட்டவிரோதமாக இந்தப் பெண்களை அழைத்துச் செல்வதற்கு ஏர் இந்தியாவின் இரண்டு ஊழியர்கள் உதவி செய்வது தெரியவந்தது.
உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இந்த கடத்தல் விவகாரத்தில் ஏஜென்டுகள் செயல்படுவதாகவும், துபாய்க்கு செல்வதற்காக சில பெண்கள் டெல்லியில் தங்கியிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில்தான் போலீசார் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி ஆள்கடத்தும் இரண்டு ஏஜென்டுகளை பிடித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி இந்த பெண்களை கடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏர் இந்தியா ஊழியர்கள் ஒவ்வொரு நபருக்கும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
Average Rating