அரியானாவில் பரிதாபம்: மனைவி, மகள், மகனை சுட்டுக்கொன்று விவசாயி தற்கொலை!!
கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயி துப்பாக்கியால் சுட்டு குடும்பத்தையே தீர்த்துக்கட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ராம்பால்(40), தொடர்ந்து பயிர்தொழில் பொய்த்துப் போனதால் சில மாதங்களாக மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக தெரிகிறது. கவலையுடன் கடன் தொல்லையும் சேர்ந்து கொண்டதால் கடந்த சில மாதங்களாக அவர் சோகத்துடன் காணப்பட்டார்.
இன்று கன்டா கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குள் கதவை தாழிட்டுக்கொண்ட ராம்பால், சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனைவி, 13 வயது மகள் மற்றும் ஆறு வயது மகன் ஆகியோரை வரிசையாக நிற்க வைத்தார். மனதை கல்லாக்கிக் கொண்டு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை உருவிய அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மூவரையும் சுட்டுக்கொன்றார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவருவதற்குள் தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ராம்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோனிபட் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating