உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி!!
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. 4 நாட்களுக்கு முன்பு சீனபூஜாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு சென்றார். அன்று இரவு திடீரென்று தென்னை மரத்தில் இருந்து குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது.
அந்த சத்தம் சிறிது நேர இடைவெளியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த சத்தத்தை கேட்ட கோவிந்தாவும், அவரது குடும்பத்தினரும் தென்னை மரத்தில் பேய் இருப்பதாகவும், அது தான் சிரித்தப்படி இருப்பதாக கருதி பீதி அடைந்தனர்.
இதைதொடர்ந்து கோவிந்தா, ஒரு சாமியாரை அழைத்து சென்று குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்ட தென்னை மரத்தை சுற்றி சிறப்பு பூஜை செய்தார். சாமியார் பூஜை போட்டு சென்ற அன்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சீரான இடைவெளியில் மீண்டும் குழந்தையின் சிரிப்பு ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. தென்னை மரத்தில் பேய் இருப்பதாக அந்த கிராமம் முழுவதும் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அனைவரும் இரவு 7 மணிக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வராமல், முடங்கி கிடந்தனர்
இதற்கிடையே தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி சீனபூஜாரி, கோவிந்தாவின் வீட்டிற்கு வந்தார். அவரிடம், கோவிந்தா, நீ தேங்காய்களை பறித்து சென்ற நாள் முதல் தென்னை மரத்தில் இருந்து பேய் இருப்பதாகவும், குழந்தையின் சிரிப்பு சத்தம் இரவில் கேட்பதாகவும் கூறினார். அப்போது சீனபூஜாரி, தேங்காய் பறிக்க வந்த போது எனது செல்போனை தவறவிட்டு விட்டேன். அந்த செல்போன் அழைப்பு ஒலி (ரிங் டோன்) கூட குழந்தை சிரிப்பது போன்று தான் இருக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து அந்த தென்னை மரத்தில் ஏறி, சீனபூஜாரி தனது செல்போனை எடுத்தார். பின்னர் செல்போனுக்கு, வேறொரு செல்போனில் இருந்து போன் செய்து காண்பித்தார். அப்போது சீனபூஜாரியின் செல்போனில் குழந்தையின் சிரிப்பு ஒலி கேட்டது.
அப்போது தான் சீனபூஜாரி தவற விட்ட செல்போன் தென்னை மரத்தில் கிடந்ததும், அதில் இருந்து குழந்தையின் சிரிப்பு ஒலி வந்ததும் தெரியவந்தது. இதனால் அந்தப் பகுதியில் 3 நாளாக நீடித்த பேய் பீதி சம்பவம் புஸ்வானமாகி போனது.
Average Rating