கர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!!
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிந்தவர் சரணப்பா சஜ்ஜன்.
மூத்த நீதிபதியான இவர் முன் ஒரு கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. அல்சூரைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் தலைவராக 1975–ம் ஆண்டு காசிநாத் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சரணப்பா விசாரித்து வந்தார். அப்போது வழக்கை முடித்து வைக்க நீதிபதி சரணப்பா, காசிநாத்திடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவ்வளவு தொகை தன்னால் தர இயலாது என்று காசிநாத் தெரிவித்தார். இதனால் கடைசியாக ரூ.1 லட்சம் வேண்டும் என்று நீதிபதி கூறிவிட்டார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத காசிநாத் இதுபற்றி கர்நாடக ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்பு பறக்கும் படையினரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு படையினரின் அறிவுரைப்படி காசிநாத் கடந்த 2014–ம் ஆண்டு நீதிபதி சரணப்பா சஜ்ஜனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை சரணப்பா சஜ்ஜன் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினரிடம் அவர் கையும், களவுமாக சிக்கினார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு பறக்கும் படையினர் விசாரித்து வந்தனர்.
லஞ்சப்புகாரில் சிக்கியதால் நீதிபதி பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார். தான் லஞ்சம் வாங்கவில்லை என்றும் அவரிடம் கடன் தான் வாங்கினேன் என்றும் நீதிபதி மறுத்தார்.
இதற்கிடையே நீதிபதி சரணப்பா தலைமறைவானார். இதைத் தொடர்ந்து போலீசாரும், ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்பு பறக்கும் படையினரும் நீதிபதியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நீதிபதி சரணப்பா சஜ்ஜனை போலீசார் நேற்று சிந்தனூர் நகரில் கைது செய்தனர்.
போலீசார் கைதான நீதிபதியை உடனே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே நீதிபதி சரணப்பா மீது மேலும் பல புகார்கள் கூறப்பட்டன. பல வழக்குகளில் அவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் இடைத்தரகர்களாக பாபுராவ் பிராதா, கவுசிக் ஜாகிர்தார் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்பட்டது. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating