பிடித்தமான பாட்டை போடாததால் மணமகனின் தந்தை சுட்டுக் கொலை: சோகத்தில் முடிந்த திருமண விழா!!
உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது தங்களுக்கு பிடித்தமான பாலிவுட் பாடல்களை போடாததால் ஆத்திரம் அடைந்த குடிமகன்கள், மணமகனின் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சகோடி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த திருமண விழா ஆட்டம், பாட்டம், குடி, கூத்து என அமோகமாக களைகட்டி இருந்தது. பின்னிரவு நேரமானதால் அதுவரை ஸ்பீக்கர்கள் மூலமாக ஒலிபரப்பப்பட்டு வந்த பாடல்களை நிறுத்திவிட்டு திருமண சடங்குகளை ஆரம்பிக்கும்படி மணமகனின் தந்தை கூறினார்.
பாட்டு நிறுத்தப்பட்டவுடன் திருமண வீட்டின் வெளியே குத்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று குடிமகன்கள் ஆத்திரம் அடைந்தனர். சவுண்ட் சர்வீஸ் ஊழியரிடம் சென்று மீண்டும் தங்களுக்கு பிடித்தமான பாட்டை போடும்படி அவர்கள் தகராறு செய்தனர்.
இதையறிந்து, விரைந்துவந்த மணமகனின் தந்தை விஷ்வாஸ், குடிபோதையில் இருந்த அந்த நபர்களை சமாதானம் செய்ய முயன்றார். தகராறு செய்தவர்களில் ஒருவர் விஷ்வாஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துடிதுடித்து கீழே சரிந்த அவரை உறவினர்கள் உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால், களைகட்டியிருந்த திருமண வீடு சில மணி நேரத்தில் சாவு வீடாக மாறியதை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Average Rating