போதை மருந்து புகார்: டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் திடீர் ஓய்வு
உலகில் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் மார்ட்டினா ஹிங்கிஸ். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது போதை மருந்து சாப்பிட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் அவர் `கோக்கைன்’ போதை மருந்து சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். அவர் நிருபர்கள் கூட்டத்தை கூட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் நான் போதை மருந்து சாப்பிட்டது உறுதி படுத்தப்பட்டது. ஆனால் ஒருபோதும் நான் போதை மருந்து சாப்பிட்டது இல்லை. 100 சதவீதம் நான் அப்பாவி. இப்போது பிரச்சினை ஏற்பட்டு இருப்பதால் இனி தொடர்ந்து என்னால் விளையாட முடியாது. மேலும் எனது உடல்நிலையும் ஏற்றுக் கொள்ளவில்லை. வயதும் ஆகி விட்டது. எனவே டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஹிங்கிஸ் 1990-ம் ஆண்டு டென்னிஸ் ஆட வந்தார். தர வரிசையில் முதல் இடத்துக்கு வந்த அவர் 5 தடவை கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றுள்ளார். 2003-ம் ஆண்டு காயம் காரண மாக டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் கடந்த ஆண்டு மறுபடியும் ஆட வந்தார். அப்போதும் வேகமாக முன்னேறி தர வரிசையில் 7-வது இடத்தை பிடித்தார். தற்போது 19-வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு 27 வயதாகிறது.