வசிம் தாஜூடீன் கொலை: பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்க உத்தரவு!!
இலங்கையின் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் மரணம் தொடர்பில் பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாஜூடீன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்திய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரகோன் இடைக்கால அறிக்கை ஒன்றை மாத்திரமே சமர்பித்ததாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே பூரண மரண விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்கப்பட வேண்டும் என இரகசிய பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், முழுமையான மரண விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு ஆனந்த சமரகோனுக்கு உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தாஜூடீன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்திய நான்கு சட்ட வைத்திய அதிகாரிகளையும் நீதிமன்றில் அழைத்து சாட்சி பெற வேண்டும் என இரகசிய பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக மேலதிக நீதவான் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Average Rating