மூன்று வயது குழந்தை கண் தானம் : இரண்டு குட்டீஸ்களுக்கு பார்வை
விபத்தில் இறந்த மூன்று வயது பெண் குழந்தையின் கண்களை தானமாக பெற்று, இரு குழந்தைகளுக்கு கண் பார்வை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் மஞ்சித் சிங்; தனியார் பஸ் டிரைவர். சமீபத்தில் இவரின் மூன்று வயது குழந்தை ஜாஷம்ப்ரீத், சாலை விபத்தில் மண்டையில் அடிபட்டு இறந்து விட்டாள்.குழந்தை இறந்த சோகத்திலும், தன் குழந்தையின் கண்களை தானமாக தந்து, பார்வையற்ற குழந்தை பார்வை பெற உதவலாம் என்று எண்ணிய மஞ்சித் சிங், அவருக்கு தெரிந்த பஞ்சாபி மொழி பத்திரிகை நிருபர் கிர்பால் சிங்கை அணுகினார்.மஞ்சித் சிங்கை, பிரபல கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷிடம் அழைத்துச் சென்றார் கிர்பால் சிங். விவரத்தைக் கேட்ட டாக்டர் அதிர்ந்து போய்விட்டார்.”குழந்தையின் கண்களை தானம் செய்ய, படிப்பறியாத பஸ் டிரைவர் முன்வந்துள்ளாரே’ என்று எண்ணி, உடனே குழந்தையின் கண்களை அகற்றி, உடனடியாகவே வேறு இரு குழந்தைகளுக்கு பொருத்தவும் செய்தார். பார்வைக் குறைவு உள்ள 15 வயதான சாஜினி, எட்டு வயதான குர்தீப் சிங் ஆகிய இரு ஏழைக் குழந்தைகள், இறந்த குழந்தையின் கண்களை தானமாக பெற்று, முழு கண் பார்வை பெற்றுள்ளனர்.டாக்டர் ரமேஷ் கூறுகையில், “நம் நாட்டில் கண் பார்வை இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு கண் பார்வை தர முடியாமல் இருப்பதற்கு, கண் தானம் செய்வோர் மிகவும் குறைவாக இருப்பதும் முக்கிய காரணம். படித்தவர்கள் கூட, “சென்டிமென்ட்’ பார்த்து கண் தானம் செய்ய முன்வராத இந்த காலத்தில், மஞ்சித் சிங் போன்ற படிப்பறியாதவர்கள் கண் தானம் செய்ய முன்வந்ததை பார்க்கும் போது, படித்தவர்கள் குறித்து உண்மையில் வெட்கப்பட வேண்டி யிருக்கிறது’ என்றார்.