300 ரூபாய் மாயமானதால் 8 மாணவர்களுக்கு கையில் சூடு போட்ட விடுதி ஊழியர்!!
விடுதியில் 300 ரூபாய் மாயமான சம்பவம் தொடர்பாக 8 மாணவர்களின் கையில் விடுதி ஊழியர் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விடுதி ஊழியரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கிராமப் புறங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியும் உள்ளது.
கடந்த 25-ந் தேதி இந்த விடுதியில் தங்கிப்படித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். இதனால் விடுதியில் 15-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தங்கியிருந்தனர். அவர்களில் சிலர் பள்ளி மைதானத்திற்கு விளையாட சென்று இருந்தனர். அப்போது ஒரு மாணவர் வைத்திருந்த ரூ.300 காணாமல் போய் விட்டது.
இது குறித்து விடுதி பணியாளர் முருகனிடம் மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே முருகன் அது குறித்து மற்ற மாணவர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறி விட்டனர்.
உடனே 8 மாணவர்கள் கையில் தீக்குச்சியால் சூடுவைத்துள்ளார். இதில் யாருடைய கையில் புண்ணாகிவிடுகிறதோ அவர்கள்தான் பணத்தை எடுத்திருப்பார்கள் என்று கூறி அதன்படி சூடுவைத்துள்ளார். ஆனால் 8 மாணவர்களின் கைகளிலும் சூடு வைத்த இடத்தில் புண்ணாகி விட்டது.
இதைப்பார்த்த விடுதி ஊழியர் சூடுவைத்தது குறித்து யாரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்றும், கேட்டால் வேறு ஏதாவது காரணம் கூறுமாறும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவர்கள் இதுபற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 9-ம் வகுப்பு மாணவர் பாரத், 10-ம் வகுப்பு மாணவர் நவீன் ஆகிய இருவரும் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கலெக்டர் அ.ஞானசேகரனிடம் கையில் விடுதி ஊழியர் சூடுவைத்தது குறித்து புகார் செய்தனர்.
மாணவர்களின் கைகளை பார்த்த கலெக்டர் ஞானசேகரன் அதிர்ச்சியடைந்தார். இந்த பிரச்சினையில் விடுதி ஊழியர் முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்தும், விடுதி காப்பாளர் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விடுதி ஊழியர் முருகன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating