99 வயது அண்ணனின் உடல்நலம் பற்றி கேட்டறிந்த அப்துல் கலாம்: ராமேசுவரம் சோக வெள்ளத்தில் மூழ்கியது!!
இந்தியாவின் ஏவுகணை மனிதர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான ராமேசுவரம் பகுதி மக்கள் சோக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவர் இயற்பியல் படித்து, பட்டதாரியான திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று சாலைகளில் அமைதி பேரணி நடத்தி அந்த பெருமகனாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் மறைவு செய்தியை அறிந்ததும் நேற்றிரவில் இருந்து ராமேசுவரம் நகரம் களையிழந்து காணப்படுகிறது. குறிப்பாக, அவரது பூர்வீக வீடு அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் சாதி, மத பேதமற்றவர்களாக உணவு, உறக்கத்தை மறந்து சோக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக, அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆற்ற முடியாத வேதனையில் தவித்து வருகின்றனர். இங்குள்ள ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் இருக்கும் இளைய தலைமுறையினர் பொறுப்புள்ள குடிமகன்களாக வளர வேண்டும் அவர் வலியுறுத்தியதையடுத்து, இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் மேற்படிப்பு படித்து, பட்டதாரியாகி, நல்ல வேலையில் சேர்ந்து, வளமுடன் வாழ்ந்து வருவதாக அப்துல் கலாம் வீட்டின் அருகே வசித்து வரும் மக்கள் கூறினர்.
நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்பு கொண்ட அப்துல் கலாம், தனது அண்ணன் முஹம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயர்(99) என்பவரின் உடல்நலம் எவ்வாறு உள்ளது? என்று கேட்டறிந்துள்ளார்.
அப்துல் கலாமின் உடலை இங்கே அடக்கம் செய்ய வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல.., ஒட்டுமொத்த ராமேசுவரம் மக்களின் விருப்பமும் இதுதான் என அவரது உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
அவரை அடக்கம் செய்யும் இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
Average Rating