இந்திய வம்சாவளி பெண் மீது இன பாகுபாடு : அமெரிக்க நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
அமெரிக்காவில் உள்ள செவ்ரோன் நிறுவனம், அந்நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இன்ஜினியர் மீது இனப் பாகுபாடுடன் நடந்து கொண்டதால், ரூ.22.3 கோடி நஷ்ட ஈடு வழங்க, அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரண் பாண்டே. சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சான் ரமோனில் உள்ள செவ்ரோன் எண்ணெய் நிறுவனத்தில் இன்ஜினியராக 15 ஆண்டுகள் வேலை பார்த்தார். இந்நிறுவனத்தில் பணிகளை பிரித்துத் தரும் தலைமை அதிகாரியாக இருப்பவர் ரெக்ஸ் மிட்செல். இவர், தன் மீது இனப் பாகுபாடுடன் நடந்து கொள்வதாகவும், தன்னை துன்புறுத்துவதாகவும், 2002ம் ஆண்டு புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, 2003ம் ஆண்டு மருத்துவ விடுப்பில் இருந்த கிரண் பாண்டேயை, செவ்ரோன் நிறுவனம் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது.இதை எதிர்த்து, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரண் பாண்டே. கிரணின் இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகளை மறுத்த செவ்ரோன் நிறுவனம், சான் ரமோனில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவருக்கு ஏற்ற பணி இல்லாததால், ஹூஸ்டன் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்ததாக கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
ஆனால், இனப் பாகுபாடு புகார் செய்ததால், பழிவாங்கும் விதத்தில் தன்னை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிரண் பாண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: செவ்ரோன் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஒரு மாதிரியாகவும், சாட்சியம் அளித்த மேலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் வேறு மாதிரியாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, கிரண் பாண்டே இன துவேசத்துடன் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகி உள்ளது.
இதற்கு தண்டனையாக, கிரணுக்கு செவ்ரோன் நிறுவனம் ரூ.10 கோடியும், அவரது கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கும், எதிர்காலத்தில் ஏற்பட உள்ள இழப்புக்கும் சேர்த்து நஷ்ட ஈடாக ரூ.22.3 கோடியும் வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்துள்ள செவ்ரோன் நிறுவனம், களங்கத்தை தீர்க்கும் முயற்சியாக அப்பீல் செய்ய ஆலோசித்து வருகிறது.