உ.பி.யில் கொடூரம்: கற்பழிப்பு வழக்கில் சமரசத்துக்கு மறுத்த சிறுமி எரித்துக் கொலை!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை கற்பழித்தவன் மீது தொடரப்பட்ட வழக்கில் சமரசம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமி உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சம்பல் மாவட்டம், அஹ்ராவுலா நவாசி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை விஜய், ராஜேந்திரா என்ற இரு வாலிபர்கள் கடந்த ஆண்டு கடத்திச் சென்று, தனிமையான ஒரு இடத்தில் வைத்து கற்பழித்தனர்.
இதுதொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர். ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகள் வழக்கை வாபஸ் பெறும்படி சிறுமியின் குடும்பத்தாரிடம் வலியுறுத்தி வந்தனர்.
சமரசத்துக்கு அந்த சிறுமி ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த விஜய்யும், ராஜேந்திராவும் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். தனியாக இருந்த அவரது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டினர். வேதனையால் துடிதுடித்த அவரை அக்கம்பக்கத்து வீட்டினர் அலிகார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தீவிர தீப்புண் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் விஜய், ராஜேந்திரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Average Rating