குண்டு வைத்து ரயிலை தகர்த்த வழக்கு: குற்றவாளிகளுக்கு 40 ஆயிரம் ஆண்டு சிறை
ஸ்பெயின் நாட்டில் நான்கு ரயில்களை வெடிகுண்டால் தகர்த்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் கடந்த 2004ம் ஆண்டு பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. நான்கு ரயில்கள் தகர்க்கப்பட்டன. உலகை உலுக்கிய இந்த தாக்குதலில் 191 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்து 800 பேர் காயமடைந்தனர். அதிர வைத்த இந்த வழக்கில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஜமால்சவுகம், ஒஸ்மான் கனோயிக், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எமிலியோ சோரஸ் டிராசோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை மாட்ரிட் தேசிய கோர்ட் விசாரித்தது. வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மூன்று பேருக்கும் தலா 40 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட எகிப்தைச் சேர்ந்த ஒஸ்மான் சயீத் அகமது விடுவிக்கப்பட்டார். 40 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை என்றாலும் ஸ்பெயின் நாட்டு சட்டப்படி 40 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தால் போதும். ஸ்பெயின் நாட்டில் அதிகபட்சமாக ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய காலம் 40 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மை கருதி இந்த வழக்கில் 40 ஆயிரம் ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.