டிஸ்கவரி விண்கலம் பூமிக்கு திரும்புவதில் காலதாமதம்?
விண்வெளி ஆய்வு கூடத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் டிஸ்கவரி விண்கலம் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படுமா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றன. இந்த ஆய்வு கூடத்திற்கு அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலத்தில் இரு பெண்கள் உட்பட ஏழு நிபுணர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று ஆய்வு கூடத்தில் புதிய மாற்றங்கள் செய்வதுடன் புதிய கருவிகள் சிலவற்றையும் பொருத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் அவ்வாய்வு கூடத்திலுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் இரு தகடுகளில் ஒரு தகடு சேதமடைந்திருப்பதனை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால் இந்த ஆய்வு கூடத்தில் மின்சார சேவை பாதிக்கப்பட்டிருப்பதுடன் அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பிற்குள்ளான மின்தகட்டை விண்வெளி நிபுணர்கள் விண்வெளியில் இறங்கி சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மின் உற்பத்திக் கருவி சேதம் அடைந்துள்ளதால் விண்வெளி நிபுணர்களுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் டிஸ்கவரி விண்கலம் பூமிக்குத் திரும்புவதில் காலதாமதம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது .