மனைவிக்கு விமானத்தைப் பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தனது மனைவியின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு விமானத்தை பரிசாக அளித்துள்ளராம்.அம்பானி பிறந்த நாள் பரிசாக வழங்கிய விமானத்தின் விலை என்ன தெரியுமா, ஜஸ்ட் ரூ.240 கோடிதான். அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானி தான் தற்போது இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். சமீபத்திய பங்குச் சந்தை உயர்வால், சொத்து மதிப்பு குண்டக்க மண்டக்க உயர்ந்து, உலகின் நம்பர் 1 பணக்காரர் நிலைக்கு ‘தள்ளப்பட்டார்’. முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா. இவர் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தனது மனைவிக்கு வித்தியாசமாக பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்த முகேஷ் , புதிதாக ஒரு விமானம் வாங்கிக் கொடுக்க முடிவு செய்து அதை நிறைவேற்றியுள்ளார். இந்த விமானம் 2 அல்லது 3 பேர் செல்லும் குட்டி விமானம் கிடையாது. பயணிகள் செல்லும் விமானம் போன்றது. விமானத்திற்குள் அலுவலகம் , பொழுது போக்கு விளையாட்டு , இசைக் கருவிகள், சாட்டிலைட் டிவி வசதி, தொலைத் தொடர்பு வயர்லெஸ் சாதனங்கள் போன்ற வசதிகள் உண்டாம்.
இது தவிர பிரத்தியேக படுக்கையறை, பார் போன்றவைகளும் இருக்கிறதாம். அதிநவீன வசதிகள் கொண்ட இந்த விமானத்தை தயாரித்தது பிரபலமான ஏர்பஸ் நிறுவனம்.
இந்த விமானத்தின் விலை அதிகமில்லை ஜஸ்ட், ரூ.240 கோடி மட்டும் தான்!
தற்போது டெல்லியில் இருக்கும் இந்த விமானம், விரைவில் மும்பைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
நம்முடைய பிறந்த நாளுக்கு யாராவது பிளாஸ்டிக் விமானம் வாங்கிக் கொடுத்தாலே அதிகம்!