மரண ருசியை பெனாசிர் விரைவில் உணர்வார் : தாலிபான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மரணத்தின் ருசியை விரைவில் உணர்வார் என தாலிபான் தீவிரவாத இயக்கம் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் தீவிரமாக தேடப்படும் தாலிபான் தலைவர்களில் ஒருவரான மவுல்வி ஃபக்கிர் அகமது இந்த மிரட்டலை விடுத்துள்ளார். பெனாசிர் கடந்த அக்டோபர் 18 ம் தேதியன்று நாடு திரும்பியபோது, அவரது வரவேற்பு ஊர்வலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர்.பெனாசிரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் தனது மிரட்டல் செய்தியில் இந்த தாக்குதலை குறிப்பிட்டுள்ள ஃபக்கிர் அகமது,” தனக்கு என்ன நிகழப்போகிறது ( மரண ருசி )என்பதை பெனாசிர் அன்றே உணர்ந்திருப்பார்.அவ்வாறு அவர் உணரவில்லை எனில் விரைவிலேயே அவர் உணர்ந்து கொள்வார் ” என தெரிவித்துள்ளார்.
மேலும் தாலிபான்கள் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களுடன் முழங்கினால் பெனாசிரின் வாய் நிரந்தரமாக மூடிவிடும் என்றும் அதில் கூறியுள்ளார் ஃபக்கிர் அகமது.
தாலிபான்களின் ரகசிய கூட்டம் ஒன்றில், ஃபக்கிர் அகமது இந்த மிரட்டல் விடுத்த வீடியோ காட்சியை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
நாடு திரும்பிய இரண்டு வாரங்களுக்குள்ளாகவே பெனாசிர், தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக துபாய் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.