சொத்து பிரச்சினையில் மகனுக்கு எதிரான வழக்கு: சாட்சியளிக்க கூண்டில் ஏறிய தாய் மயங்கி விழுந்து இறந்தார்!!
திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்த அசூர் அருகே உள்ள பொய்கை குடியை சேர்ந்தவர் சங்கிலிமுத்து. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 65). இவர்களது மகன் வடிவேல்.
வடிவேலுக்கும், அவரது தந்தையான சங்கிலிமுத்துவுக்கும் இடையே கடந்த 1993–ம் ஆண்டில் இருந்து சொத்து பிரச்சினை தொடர்பான வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. சங்கிலிமுத்து இறந்த பின்னர் அவரது மனைவி வள்ளியம்மை இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் திருச்சி முதன்மை உரிமையியல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வள்ளியம்மை சாட்சி கூண்டில் ஏறி நின்று வாக்குமூலம் அளிக்க தயாரானார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் வள்ளியம்மையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் வள்ளியம்மை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
மகனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு வந்து சாட்சி அளிக்க முயன்ற தாய் சாட்சி கூண்டிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating